முத்துராமலிங்க தேவர் படத்தை தவறாக சித்திரித்து இணையதளத்தில் பதிவிட்ட குற்றச்சாட்டில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரை காவல் நிலையத்தில் சரணடைய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராம். ஆட்டோ ஓட்டுநரான இவர், சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படத்தை தவறாக சித்திரித்து சமூகவலைதளங்களில் பரவவிட்டதாக ஜெயராம் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், ஜெயராம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன், திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர் ஆஜராகி வாதிடுகையில், மனுதாரர் மீது ஏற்கெனவே இரு வழக்குகள் உள்ளன. தற்போது இப்பிரச்னையில் 3 வழக்குகள் என மொத்தம் 5 வழக்குகள் உள்ளன. மக்கள் உணர்வுகளை தூண்டும் வகையில் முகநூலில் பதிவிட்டுள்ளார் என்றார்.
இதனை பதிவுசெய்துகொண்ட நீதிபதி, ஜெயராமை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை(ஏப். 17) சரணடைய உத்தரவிட்டார். மேலும், முத்துராமலிங்க தேவர் படத்தை தவறாக சித்திரித்து, முகநூலில் பதிவிட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட படத்தை முகநூலில் இருந்து நீக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.