மதுரை அருகே வியாழன்கிழமை அப்பன்திருப்பதி பகுதியில் கழுத்து அறுபட்ட நிலையில் பால் வியாபாரியின் சடலம் மீட்கப்பட்டது.
அழகர்கோவில் அருகே உள்ள அப்பன்திருப்பதி பகுதியில் பூண்டி விலக்கில் சாலையோரத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கழுத்தில் துண்டு சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதியினர் அப்பன்திருப்பதி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது, முதியவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் குறித்து விசாரணை நடத்தினர். இதில், கொலைசெய்யப்பட்டவர் மதுரை கோ.புதூர் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் (62) என்பதும், பால் வியாபாரம் செய்து வருபவர் என்றும் தெரிந்தது. மேலும் மதுரை டிஆர்ஓ காலனி வீடுகளுக்கு பால் ஊற்றுவதற்காக செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீஸார் பால்ராஜை தேடி வந்துதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, பால்ராஜை கடத்திச்சென்ற நபர்கள் வேறு எங்கோ வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, வாகனத்தில் கொண்டு வந்து இங்கு வீசியுள்ளனர். கொலையாளிகள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.