திருமங்கலத்தில் பங்கு வர்த்தகம் மூலம் இளைஞரிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 4 பேர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
திருமங்கலம் காமராஜர் நகரைச் சேர்ந்த மோகன் மகன் தினேஷ்(28). இவர் அப்பகுதியில் பங்கு வர்த்தகம் தொடர்பான கணினி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரது நிறுவனத்தில் அதே பகுதியை சேர்ந்த காளீஸ்வரி(26) பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு காளீஸ்வரி அதே பகுதியில் தனியாக பங்கு வர்த்தகம் மையம் ஒன்றை தொடங்கினாராம். இதன் மூலம் தினேஷ் கணக்கிலிருந்து அவருக்குத் தெரியாமல் ரூ.24 லட்சம் வரை எடுத்தாராம்.
இதுதொடர்பாக தினேஷ் பலமுறை காளீஸ்வரி இடம் பணம் கேட்டும் திருப்பி கொடுக்கவில்லையாம். இதையடுத்து மதுரை ஆணையர் அலுவலகத்தில் தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் காளீஸ்வரி அவரது உறவினர் வடிவேல் உள்பட 4 பேர் மீது திருமங்கலம் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.