வரும் மக்களவைத் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்கட்ட பரிசோதனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வரும் 2019 மக்களவைத் தேர்தலுக்கு நாடு முழுவதும் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தற்போது பயன்பாட்டில் இருப்பதைக் காட்டிலும் நவீனப்படுத்தப்பட்ட இயந்திரங்களை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளன.
மதுரை மாவட்டத்துக்கு 6,810 வாக்குப்பதிவு பிரிவு (பேலட் யூனிட்), 4200 கட்டுப்பாட்டுப் பிரிவு (கன்ட்ரோல் யூனிட்) கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரப்பெற்று, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள பில்லர் அரங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.
இந்த இயந்திரங்களின் முதல்கட்ட பரிசோதனையை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். அனைத்து அரசியல் கட்சிகளின் முன்னிலையில் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு சோதனை செய்து காண்பிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் கூறியது:
மதுரை மாவட்டத்துக்கு வரப்பெற்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் முதல் கட்ட பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பெங்களூரு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இருந்து 17 தொழில்நுட்ப நிபுணர்கள் தினமும் 1000 இயந்திரங்களைச் சரிபார்க்க உள்ளனர். அதேபோல, வாக்களித்ததை உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டு (விவிபேட்) இயந்திரங்கள் விரைவில் வரவுள்ளன என்றார்.