சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை மாநகரக் காவல் முன்னாள் ஆணையர் உள்பட 3 பேர் முதல்வர் சிறப்பு பதக்க பட்டியலுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
நிகழாண்டு சுதந்திர தினத்தையொட்டி தமிழக முதல்வரின் சிறப்பு பதக்கம் பெறும் காவல்துறை அதிகாரிகள் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இதில் மதுரை மாநகரக்காவல் ஆணையராக பணியாற்றிய மகேஷ்குமார் அகர்வால் சிறந்த பொதுமக்கள் சேவைக்காக முதல்வர் சிறப்பு பதக்க பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இவர் தற்போது சென்னையில் சிபிசிஐடி ஐஜியாக பணியாற்றி வருகிறார். இதே போல மதுரை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் மற்றும் விளக்குத்தூண் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜே.மகேஷ்குமார் ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினருக்கான பதக்கம் வழங்கும் விழாவில் இவர்களுக்கு முதல்வர் பதக்கம் வழங்கப்பட உள்ளது.