மதுரை மாவட்டம் மேலூரில் மருத்துவர் வீட்டில் புதன்கிழமை காலை புகுந்த முகமூடி கொள்ளையர்கள் 6 பேர் ரூ. 5 லட்சம் ரொக்கம், 6 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
மேலூர் காந்திஜி பூங்கா சாலை வீதியில் வசித்து வசிப்பவர் மருத்துவர் பாஸ்கரன். இவர் புதன்கிழமை காலை நடைப்பயிற்சிக்குச் சென்றுவிட்டார். அப்போது முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு, துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த 6 பேர் மருத்துவர் மனைவி மீரா, வீட்டின் காவலர், சமையல்காரப் பெண்ணை ஓர் அறையில் தள்ளி பூட்டிவிட்டு, பீரோவிலிருந்த ரொக்கம் ரூ. 5 லட்சம், மீரா அணிந்திருந்த 6 பவுன் சங்கிலி ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
காலை 7 மணிக்கு பொதுமக்கள் நடமாட்டம் உள்ள நிலையில், மருத்துவரிடம் சிகிச்சை பெற வந்தவர்கள் போல நடித்து ரொக்கம் நகையுடன் தப்பி சென்றுள்ளனர். அறையில் பூட்டப்பட்டிருந்த மருத்துவர் மனைவி மீரா தொலைபேசி மூலம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். மேலூர் காவல் ஆய்வாளர் சேசு, துணைக் காவல் கண்காணிப்பாளர் சுபாஷ், மதுரை ஊரக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், தென் மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் ஆகியோர் சம்பவம் நடைபெற்ற வீட்டில் விசாரணை மேற்கொண்டனர்.
தடயவியல் நிபுணர்கள் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்களை சேகரித்தனர். சம்பவம் தொடர்பாக மருத்துவர் பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில், மேலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஊரக காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்தார்.