திருவாதவூர் அருகேயுள்ள ஆமூர் அய்யம்பொழில் ஈஸ்வரமுடைய அம்மன் கோயிலில் உற்சவமூர்த்தி சிலை மற்றும் பூஜைபொருள்கள் திருடுபோனது குறித்து போலீஸார் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை மாவட்டம் திருவாதவூர்-ஒத்தக்கடை சாலையில் ஆமூர் அய்யம்பொழில் ஈஸ்வரமுடைய அம்மன் கோயிலில் உள்ளது. இக்கோயில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நிர்வாகத்துக்குள்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை இக்கோயில் பூட்டை உடைத்து, ரூ.1 லட்சம் மதிப்புள்ள உற்சவமூர்த்தியின் பித்தளைச் சிலை மற்றும் திருவாச்சி, பூஜைப் பொருள்களை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து கோயில் அறங்காவலர் திரவியகுமார் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்தார். அதன்பேரில் மேலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.