மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்ற 8 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து, அவர்களிடம் இருந்து 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மதுரை நகரில் கஞ்சா விற்பனையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை காவல் ஆணையர் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக டெல்டா அதிரடிப்படையை சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் அதிரடிப்படை போலீஸார் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். இதில் மஸ்தான்பட்டி பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கஞ்சா கடத்தி வந்த ராஜாக்கூரை சேர்ந்த குமார், ராஜேஸ்குமார், வசந்த் ஆகியோரை போலீஸார் கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இதேபோல கரிமேடு புதுஜெயில் சாலையில் போலீஸார் சோதனை நடத்தினர். இதில் அப்பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த அழகம்மாள், உதயகுமார் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த முருகானந்தம், சுண்டம்மாள், விஜயலட்சுமி ஆகியோரையும் கைது செய்து ஆட்டோ மற்றும் , 3 கிலோ கஞ்சா, ரூ.32 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.