கடவுச்சீட்டு விண்ணப்பதாரர் குறித்த காவல் துறை விசாரணை அறிக்கையை இணைய வழியில் அனுப்புவதற்கான கையடக்கக் கணினிகளை காவல் துறையினருக்கு மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
காவல் துறை அறிக்கை அடிப்படையிலேயே கடவுச்சீட்டு வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் விசாரணை கோரும் படிவங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
இதில் ஏற்படக்கூடிய காலதாமதத்தைத் தவிர்க்கும் வகையில் இணைய வழியில் காவல் துறை விசாரணை அறிக்கை பெறும் நடைமுறையை வெளியுறவுத் துறை அறிமுகம் செய்துள்ளது.
மேலும் இதற்கென புதிய செயலியும் அறிமுகம் செய்யப்பட்டு, கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் விசாரணை மேற்கொள்ளும் காவல் துறையினருக்கு கையடக்கக் கணினி (டேப்லெட்) வழங்கப்படுகிறது. இந்த செயலியைப் பயன்படுத்தி மிக விரைவில் விண்ணப்பதாரர் மீதான விசாரணை அறிக்கையை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க முடியும்.
கடவுச்சீட்டு விண்ணப்ப விசாரணை மேற்கொள்ளும் மதுரை மாநகர காவல் துறையினருக்கு புதிய செயலி குறித்த பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
இப் பயிற்சியைத் தொடங்கி வைத்த மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், காவல் துறையினருக்கு கையடக்கக் கணினிகளை வழங்கினார்.
மண்டல கடவுச்சீட்டு அலுவலர் அருண் பிரசாத், மாநகரக் காவல் துணை சசிமோகன், மாநகர் காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் மற்றும் கடவுச்சீட்டு விசாரணை மேற்கொள்ளும் போலீஸார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.