இணையவழி பத்திரப் பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே சர்வர் முடங்கியதால், கிரையப் பத்திரங்கள் பதிவேற்றம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
பத்திரப் பதிவுத் துறையில் கிரையப் பத்திர ஆவணங்கள், ஆவணங்கள் நகல் எடுத்தல், வில்லங்கச் சான்று பெறுதல் ஆகிய நடைமுறைகள் இணையவழியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதற்கென ஸ்டார் 2.0 என்ற புதிய மென்பொருள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இணையவழி பதிவு நடைமுறையை தமிழக முதல்வர் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் இணையவழி நடைமுறை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. புதிய நடைமுறையில் பத்திரப்பதிவுக்கு இணையவழியில் விண்ணப்பதாரர்கள் கிரைய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய முயன்றபோது, இணைப்புக் கிடைக்கவில்லை. இதனால் பழைய நடைமுறையில் பத்திரப்பதிவு செய்யுமாறு விண்ணப்பதாரர்களும், பத்திர எழுத்தர்களும் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், புதிய நடைமுறையில் தான் பத்திரப் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருப்பதால், கோரிக்கையை ஏற்க
அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இந்த புதிய நடைமுறையில் ஆவணங்கள் இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட சார்-பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்படும். அவற்றைச் சரிபார்த்து ஒப்புதல் அளித்த பிறகே பதிவு செய்ய முடியும். ஒவ்வொரு ஆவணத்தின் மீதும் 3 நாள்களில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
தற்போது முதல் நாளிலேயே சர்வர் முடங்கிவிட்ட நிலையில், புதன்கிழமை இரு நாள்களுக்குரிய விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும். அதிலும் சர்வர் இணைப்பு பிரச்னை ஏற்பட்டால், பத்திர பதிவு வரும் நாள்களில் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதல் நாள்கள் ஆகும் என பத்திர எழுத்தர்கள் தெரிவிக்கின்றனர்.