மதுரை அருகே வியாழக்கிழமை இரவு இளைஞரை கத்தியால் குத்தி, அவரிடம் இருந்த ரூ. 57 ஆயிரத்தை 3 பேர் கும்பல் பறித்துச் சென்றது.
மதுரையை அடுத்த ஊமச்சிகுளம் அருகே உள்ள வீரபாண்டியைச் சேர்ந்தவர் சரத்குமார் (34) . இவர் பாத்திமா கல்லூரி பகுதியில் இருசக்கர வாகனங்களுக்கு நிதியுதவி அளிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், கடன் பெற்றவர்களிடம் தவணைத் தொகையை வசூலித்த சரத்குமார் வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அய்யனார்புரம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரை வழிமறித்து கத்தியால் குத்தி, அவரிடம் இருந்த ரூ. 57 ஆயிரத்தைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து ஊமச்சிகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.