மதுரை மாநகரில் பல்வேறு இடங்களிலிருந்து மீட்கப்பட்ட இரு சக்கர வாகனங்களை, அதன் உரிமையாளர்களிடம் மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் வியாழக்கிழமை ஒப்படைத்தார்.
இது தொடர்பாக மதுரை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
மதுரை மாநகரக் காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்ற பின்னர், மதுரை மாநகரக் காவல்துறைக்குள்பட்ட 21 காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத 520 இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் 2 மாதங்களுக்கு முன் பொது ஏலம் விடப்பட்டது. இதன்மூலம், அரசுக்கு ரூ.15 லட்சம் வருவாய் கிடைத்தது.
அதையடுத்து, மதுரை நகரில் உள்ள 21 காவல் நிலையங்களிலும் நிறுத்தப்பட்டிருந்த 1,525 வாகனங்கள் ஆயுதப்படை மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டன. இந்த வாகனங்களின் உரிமையாளர்களைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் ஒரு மாதத்தில் விசாரணை நடத்தி, 125 வாகனங்களின் உரிமையாளர்களைக் கண்டுபிடித்தனர். இவர்களில் 83 பேரிடம் அவரவர் வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக மூன்றாவது கட்டமாக, 2 ஆட்டோக்கள், 88 இரு சக்கர வாகனங்களின் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதைத் தொடர்ந்து, மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் வாகனங்களை அந்தந்த உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.
இவை தவிர, 180 வாகனங்கள் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவை என்பது கண்டறியப்பட்டு, அந்தந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் மூலம் வாகனங்களின் உரிமையாளர்களின் முகவரி சேகரிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும். இதர 1,122 வாகனங்களில் 309 வாகனங்களின் உரிமையாளர்கள் முகவரி கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் விரைவில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.