மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு மொழித்திறன், சமூக செயல்பாட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை கூறினார்.
செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டமானது 2018-19 கல்வி ஆண்டிலேயே செயல்படுத்தப்படும். புதிய பாடத் திட்டத்துக்கான பாடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. புதிய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான நவீன பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.
சிறப்புக் குழு பரிந்துரை மற்றும் ஆலோசனை அடிப்படையில் மாணவர்களின் நலன் சார்ந்து இப்புதிய பாடத்திட்டம் அமைந்து உள்ளது. 21 பொதுக் கொள்கை அடிப்படையில் அனைத்துப் பாடங்களுக்கும் பொருந்தும் வகையில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவர் மொழித் திறனை மேம்படுத்தும் வகையில் பாடங்கள் இருக்கும். அடிப்படை சட்டம், அடிப்படைக் கடமைகள், சமூக பொறுப்புணர்வு, சாலை போக்குவரத்து விழிப்புணர்வு என வாழ்வியல் சார்ந்த கற்பித்தல் ஆகியவையும் புதிய பாடத்திட்ட அம்சங்களாகும். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை மாணவ, மாணவியர் அடங்கிய இசைக்குழு உருவாக்கப்படவுள்ளது. மாணவ, மாணவியரின் தனித்திறனை அடையாளம் கண்டு அதை மேம்படுத்தும் வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன என்றார்.