சர்கார் திரைப்படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்ற காட்சிகளை நீக்கியதற்கு அந்த திரைப்படக் குழுவுக்கு நன்றி தெரிவிப்பதாக, அதிமுகவின் ஜெயலலிதா பேரவை செயலரும், வருவாய்த் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:
சர்கார் திரைப்படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கும் வகையிலும், அவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு எதிராகவும் வசனங்கள் மற்றும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது தமிழக மக்களிடையே கடுமையான எதிர்ப்பைக் கிளப்பியது. மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, சர்கார் படக்குழு, திரைப்படம் மறுதணிக்கை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு, திரையிடப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ள சர்கார் படக் குழுவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேநேரம், இனி வரும் காலங்களில் வியாபார நோக்குடனும், அரசியல் நோக்கத்தோடும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து இதுபோன்ற காட்சிகளை வைக்க வேண்டாம் என திரைத் துறையினரைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
அதிமுகவின் ஜெயலலிதா பேரவை மாநகர் மாவட்டச் செயலர் எஸ்.எஸ்.சரவணன், துணைத் செயலர் பா.வெற்றிவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.