திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 25 ஏக்கர் நிலங்களை பொதுப்பணித்துறையினர் செவ்வாய்க்கிழமை முழுவதுமாக அகற்றினர்.
உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் கண்மாய் ஆக்கிரமிப்புகளை கடந்த சில நாள்களாக பொதுப்பணித் துறையினர் அகற்றி வருகின்றனர். இதில் தென்கால் கண்மாயைச்சுற்றி மாட்டுத்தொழுவம், புற்கள் வளர்த்தல், தோட்டம் உள்ளிட்ட பல்வேறு ஆக்கிரமிப்புகளை கடந்த சில நாள்களாக பொதுப்பணித் துறையினர் அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தென்கால் கண்மாய் ஆக்கிரமிப்பு பகுதிகள் அனைத்தும் சேர்த்து சுமார் 25 ஏக்கர் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது. மீண்டும் ஆக்கிரமிக்க முடியாத வகையில் கண்மாய் கரை உயர்த்தப்பட்டு, எல்லைக் கற்கள் வைக்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன், கோட்டாட்சியர் அரவிந்தன், வட்டாட்சியர் சுரேஷ், பொதுப்பணித்துறை செயற்பொறியளர் சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் மோகன்குமார், பணி ஆய்வர் வரதன் உள்ளிட்டோர் தலைமையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதுகுறித்து பொதுப்பணித் துறையினர் கூறியது: கடந்த சில தினங்களாக தென்கால் கண்மாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றி வருகிறோம்.
இதில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த தென்னை, புளி, நாவல் உள்ளிட்ட 40 -க்கும் மேற்பட்ட மரங்களை அகற்றாமல் அவற்றை கிராம நிர்வாக அலுவலர் மூலம் அரசு அடங்கலில் சேர்க்கப்பட்டு விட்டது. சுமார் 25 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்ட தால் கண்மாயில் கூடுதலாக தண்ணீரைத் தேக்கி சேமிக்கலாம் என்றனர்.