அண்ணா பிறந்த நாள் விழா: அரசியல் கட்சியினர் மாலையணிவித்து மரியாதை

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, மதுரை நெல்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு சனிக்கிழமை அரசியல் கட்சியினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.


அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, மதுரை நெல்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு சனிக்கிழமை அரசியல் கட்சியினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக சார்பில், கட்சியின் மாநகர் மாவட்ட அவைத் தலைவர் கே. துரைப்பாண்டியன் தலைமையில், பொருளாளர் ராஜா, எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் எம்.எஸ்.பாண்டியன் மற்றும் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுகவின் மதுரை மாநகர் மாவட்ட பொறுப்புக் குழுத் தலைவர் கோ. தளபதி தலைமையில், முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், முன்னாள் மேயர் பெ. குழந்தைவேல், பொறுப்புக் குழு உறுப்பினர்கள் வ. வேலுச்சாமி, ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமானோர் முனிச்சாலை - நெல்பேட்டை சந்திப்பு அருகே இருந்து ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் மற்றும் ஆதரவாளர்களுடன் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநகர் மாவட்டச் செயலர் ஜெயபால் தலைமையில், அக் கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
அனைத்துக் கட்சியினரும் ஒரே நேரத்தில் கூடியதால் பரபரப்பு: நெல்பேட்டை ரவுண்டானா பகுதியில் உள்ள
அண்ணா சிலைக்கு, அவரது பிறந்தநாளின்போது அனைத்துக் கட்சியினரும் மாலை அணிவிப்பது வழக்கம். அதன்படி, சிலைக்கு மாலை அணிவிக்க அனைத்துக் கட்சி தொண்டர்களும் ஒரே நேரத்தில் கூடினர்.
அப்போது, திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வரும்போது அழகிரி ஆதரவாளர்களும், அதிமுகவினர் மாலை அணிவிக்க வரும் போது அமமுகவினரும் கோஷம் எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதனால், நெல்பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இப் பகுதியை கடந்து செல்ல முடியாமல் சாலைகளில் நகரப் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.
மேலும், அண்ணா சிலையின் கை பகுதியில் அமமுக-வின் கொடியை கட்டி வைத்திருந்தனர். சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அதிமுகவினர், அந்தக் கொடியை அகற்றினர்.
வாடிப்பட்டி: மதுரை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில், வாடிப்பட்டியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதிமுக மதுரை புறநகர் மாவட்டச் செயலரும், மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி. ராஜன்செல்லப்பா தலைமை வகித்தார். அமைப்புச் செயலர் ம. முத்துராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே. மாணிக்கம், பா. நீதிபதி, பி. பெரியபுள்ளான், புறநகர் மாவட்ட அவைத் தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com