மதுரை வடக்கு, தெற்கு, மாநகர் மாவட்ட திமுக சார்பில் தமிழக அரசைக் கண்டித்து செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் எம்.மணிமாறன், பி.மூர்த்தி, கோ.தளபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் முத்துராமலிங்கம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சரவணன், ஜெயராமன், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஐ.மகிழன், மாவட்ட பிரதிநிதி உசிலை சிவா, இளைஞரணி துணை அமைப்பாளர் வி.விமல் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.
அப்போது திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் குட்கா ஊழல், நெடுஞ்சாலைத்துறை ஊழல், சத்துணவு முட்டையில் ஊழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நடைபெற்ற ஊழல்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிக் கொண்டு வந்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தேர்தலில் ஊழல் பணத்தில் வென்றுவிடலாம் என அமைச்சர்கள் நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடைபெறாது. மக்கள் இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்றார்.