போடி அருகே வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதாக, முறுக்கு வியாபாரி உள்பட 10 பேர் மீது, போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
போடி அருகே டொம்புச்சேரியை அடுத்த சாலிமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலம்மாள் (23). இவருக்கும், ஆண்டிபட்டி அருகே மாயாண்டிபுரத்தைச் சேர்ந்த நாகராஜ் (30) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அதையடுத்த சில நாள்களில், நாகராஜ் முறுக்கு வியாபாரத்துக்காக தெலங்கானா மாநிலத்துக்கு சென்றுவிட்டாராம்.
அதையடுத்து, நாகராஜ் மற்றும் அவரது பெற்றோர் பாலுச்சாமி, சடையம்மாள் மற்றும் உறவினர்கள், தொடர்ந்து நாகராஜுடன் குடும்பம் நடத்த வேண்டும் என்றால் கூடுதலாக ரூ. 2 லட்சம் வரதட்சணை தர வேண்டும் என்றும், இல்லையெனில் நாகராஜுக்கு 2 ஆவது திருமணம் செய்து வைக்கப் போவதாக கோபாலம்மாளிடம் மிரட்டினராம்.
இது குறித்து கோபாலம்மாள், போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில், காவல் நிலைய ஆய்வாளர் சரசுவதி மற்றும் போலீஸார் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக, நாகராஜ் உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.