பெரியகுளம் அருகே முதியவர் ஒருவர் உயிரிழந்ததற்கு ஊராட்சிச் செயலர் தான் காரணம் எனக்கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் காமாட்சி (65). இவர் அப்பகுதியில் உள்ள துவக்கப் பள்ளிக்கு செல்லும் சாலையில் ஆக்கிரமித்து வீடு கட்டி வந்துள்ளார். வீடு இடையூறாக இருப்பதாகக் கூறி ஊராட்சி நிர்வாகம் முறையாக தகவல் தந்து வீட்டை அகற்றியதாகக் கூறப்படுகிறது. அப்போது அதனைப் பார்த்து கொண்டிருந்த காமாட்சி மயங்கி கிழே விழுந்து இறந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆக்கிரமிப்பை அகற்றிய போது அவரை ஊராட்சிச் செயலர் கிழே தள்ளி விட்டதால் தான் அவர் இறந்ததாகக் கூறி காமாட்சியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.