தேனியில் அரசு மருத்துவரிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக, 7 பேர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து, ஒருவரைக் கைது செய்தனர்.
தேனி, கோட்டைக்களம் நேருஜி தெருவைச் சேர்ந்தவர் திருமுருகன். இவர், வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். திருமுருகன் கடந்த 2015-ஆம் ஆண்டில், சிலமலையைச் சேர்ந்த சுருளிராஜ், சங்கரநாராயணன், முத்துராமலிங்கம், லட்சுமணன், காளியப்பன், செல்வம் மற்றும் கூடலூரைச் சேர்ந்த சர்தார் மன்சூர் ஆகியோரிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
இந்த கடன் தொகைக்கு ஆதாரமாக திருமுருகன் தனது வங்கி காசோலைகளை கொடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடன் தொகை ரூ. 5 லட்சம், வட்டி ரூ. 9 லட்சம் என மொத்தம் ரூ.14 லட்சத்தை திரும்பச் செலுத்திய பின்னரும், கடன் தொகைக்கு ஆதாரமாக கொடுத்திருந்த வங்கிக் காசோலைகளை திரும்பத் தராமல், தன்னிடம் கந்து வட்டி கேட்டும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுவதாக, சுருளிராஜ் உள்ளிட்ட 7 பேர் மீதும் மாவட்டத் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருமுருகன் புகார் அளித்தார். இதனடிப்படையில், சுருளிராஜ் உள்ளிட்ட 7 பேர் மீதும் தேனி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, சர்தார் மன்சூரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேரை தேடி வருவதாக போலீஸார் கூறினர்.