தேனி மாவட்ட விவசாயிகள் தங்களது பயிர் சாகுபடி பரப்பளவு விவரம், அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதை கிராம நிர்வாக அலுவலங்களுக்கு நேரில் சென்று பார்வையிடலாம் என்று மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தெரிவித்தார்.
இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாவட்டத்தில் பருவமழை பொய்தததால் வறட்சியால் மொத்தம் 43,286 ஏக்கர் பரப்பளவில் நெல், சிறுதானியம், எண்ணெய் வித்து பயிர்கள், பருத்தி, கரும்பு மற்றும் தோட்டப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, பயிர் சாகுபடி பாதிப்பு குறித்து வருவாய்த் துறை, விவசாயத் துறை மற்றும் தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். எனவே, விவசாயிகள் தாங்களது பயிர் சாகுபடி, பரப்பளவு ஆகிய விவரங்கள் வருவாய்த் துறை அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள விவரத்தை, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்துக்கு நேரில் சென்று சரிபார்த்து உறுதி செய்து கொள்ளலாம் என்று அதில் தெரிவித்துள்ளார்.