தேனி மாவட்டம் சின்னமனூரில் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள உடையகுளத்தை விவசாய சங்கத்தினர் பொதுமக்கள் உதவியுடன் மீட்கும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
முல்லைப் பெரியாற்றிலிருந்து வரும் பிரதான கால்வாய் மூலமாக இக்குளத்தில் தண்ணீரை சேமித்து நெற்பயிர் விவசாயம் நடைபெறும். ஆனால் குளம் தற்போது 50 ஏக்கர் வரையில் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் இங்கு தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள், மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் மனு அளித்தனர். இதனிடையே சில நாள்களுக்கு முன் மாவட்ட நிர்வாகம், குளத்தில் உள்ள மண்ணை அள்ளிக் கொள்ள அனுமதி வழங்கியது. ஆனால் பொதுப்பணிதுறையினர் தனி நபர் ஒருவருக்கு மண் அள்ளிக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளதாகவும், ஆக்கிரமிப்பு குளத்தை மீட்காமல் மண் அள்ளக் கூடாது என்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மண் அள்ளும் பணி நிறுத்தப்பட்டது. இதனிடையே சின்னமனூர் விவசாய சங்கத்தினர், முல்லைப் பெரியாறு நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் 30-க்கும் மேற்பட்ட டிராக்டர் மற்றும் ஜே.சி.பி இயந்திரம் மூலம் குளத்திலிருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தில் மாவட்ட நிர்வாகம் உத்தரவு இல்லாமல் மண் அள்ளக்கூடாது என சின்னமனூர் போலீஸாருடன் சென்று பொதுப்பணித்துறையினர் எச்சரித்தனர். அப்போது விவசாய சங்கத்தை சேர்ந்த நாங்களே பொதுமக்களுடன் இணைந்து ஆக்கிரமிப்பு குளத்தை மீட்க தொடங்கி இருப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் திரும்பிச் சென்றனர்.