தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வரர் சுரபி நதி கால்வாயில் ரூ.23 லட்சம் செலவில் காங்கிரீட் படித்துறை கட்டுமானப்பணி நடைபெறுகிறது.
குச்சனூர் சனீஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. புண்ணிய ஸ்தலமாக இருப்பதோடு தற்போது சுற்றுலாத் தலமாகவும் மாற்றப்படுள்ளது. கோயில் முன்பாக செல்லும் சுரபி நதிக் கால்வாயில் நீராடும் பக்தர்கள் புதிய ஆடை அணிந்துகொண்டு, பழைய ஆடையை கால்வாய் தண்ணீர் விட்டு விடுவது வழக்கம். இதன் மூலமாக தங்களுடைய தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
இவ்வாறாக இக்கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கால்வாயில் விட்டுச்சென்ற ஆடைகள் பல மாதங்களாக அங்கேயே தேக்கமாகி சுகாதரா சீர்கேட்டை ஏற்படுத்துதாக புகார் எழுந்தது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கால்வாயை சுத்தம் செய்து, படித்துறை அமைக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து சுற்றுலாத்துறை மேம்பாட்டு நிதியில் படித்துறை கட்ட ரூ. 23 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வரும் ஜூலை 22 ஆம் தேதி ஆடித்திருவிழா துவங்க இருக்கும் நிலையில் 140 மீட்டர் நீளத்திற்கு கால்வாயின் இருபக்கமும் கான்கிரீட் தளத்துடன் படித்துறை அமைக்கும் பணி தொடங்கியது. இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணவேணி கூறுகையில், ஜூலை 22 ஆம்தேதி திருவிழா துவங்க இருக்கிறது. தற்போது கால்வாயின் ஒரு பக்கத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. திருவிழா முடிந்த பின்னர் கால்வாயின் இருபக்கத்திலுல் கான்கிரீட் படித்துறை அமைத்து முடிக்கப்படும் என்றார்.