போடி பகுதியில் அரசு மதுபானக் கடைகளுக்கு அருகே அனுமதியின்றி செயல்படும் மதுக் கூடங்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில், போடி நகர் பகுதியில் அனைத்து மதுபானக் கடைகளும் அகற்றப்பட்டன. ஆனால், போடி ரெங்கநாதபுரத்தில் ராணிமங்கம்மாள் சாலை அருகிலும், வினோபாஜி காலனியிலும், சாலைக் காளியம்மன் கோயில் கிழக்குப் பகுதியிலும் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
மதுபானக் கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மதுக் கூடங்களுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில், இந்த கடைகளுக்கு அருகில் சில தனி நபர்கள் கடைகளை வைத்துக்கொண்டு, அவற்றை மது அருந்தும் கூடங்களாக நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த கூடங்களில் விதிகளுக்கு மாறாக பிளாஸ்டிக் டம்ளர், குடிநீர் பாக்கெட்டுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளுக்கு மாறாக உணவுப் பொருள்களை சமைத்து விநியோகம் செய்து வருகின்றனர்.
இதில், பிளாஸ்டிக் டம்ளர் உள்ளிட்ட பொருள்கள் காற்றில் பறந்து குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகளாக குவிந்துள்ளன.
இங்கு வந்து மது அருந்துவோர் மதுபோதையில் குடியிருப்பு மக்களுக்கு இடையூறு செய்து வருவதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுத்து மதுபானக் கடைகளுக்கு அருகில் அனுமதியின்றி செயல்படும் மதுக் கூடங்களை மூட உத்தரவிடவேண்டும் என, இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.