தேனி அருகே கோட்டூரில் ஞாயிற்றுக்கிழமை உணவகத் தொழிலாளி, அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
கோட்டூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் வீரய்யா மகன் விஷ்ணுபாண்டி என்ற சதாம் உசேன் (17). இவர், கோட்டூரில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்தார். இந் நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விஷ்ணுபாண்டி தனது வீட்டில் தலை, நெற்றி, முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். சடலத்தின் அருகே ரத்தக் கரை படிந்த ஹாலோ பிளாக் கல் கிடந்துள்ளது. இது குறித்து விஷ்ணுபாண்டியின் மாமா கோட்டூரைச் சேர்ந்த ஐயப்பன் அளித்த புகாரின்பேரில், வீரபாண்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
போலீஸ் விசாரணை: கொலை செய்யப்பட்டுக் கிடந்த விஷ்ணுபாண்டிக்கு சில திருட்டு வழக்குகளில் தொடர்பு இருந்துள்ளது. தேனி, சின்னமனூர் ஆகிய காவல் நிலையங்களில் இரு சக்கர வாகனம் திருடியதாக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில், இவர் வசித்து வரும் தெருவில் கோழிகள் திருடுபோன பிரச்னையில், விஷ்ணுபாண்டிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்கள் சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதத்தில் கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், விஷ்ணுபாண்டியின் நண்பர்கள் 4 பேரிடமும் மற்றும் அவரது தந்தை வீரய்யா, பாட்டி பாப்பம்மாள் ஆகியோரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.