போடியில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
போடியில் பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்பட 4 பேர் மீது வியாழக்கிழமை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போடி செல்லம்மாள் அபார்ட்மெண்டில் வசித்து வருபவர் முருகன் மகள் காயத்ரி (22).
இவருக்கும், தேனி சிவராம் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ் என்பவருக்கும் கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 30 பவுன் நகை, ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருள்கள் கொடுக்கப்பட்டதாம்.
இந்நிலையில் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்றும், ரூ.10 லட்சம் வாங்கி வரும்படியும் கூறி காயத்ரியை, அவரது கணவர் ராஜேஷ், மாமனார் ராஜேந்திரன், மாமியார் பூங்கொடி, ராஜேஷின் அக்காள் சாந்தி ஆகியோர் கொடுமைப்படுத்தினராம்.
இதுகுறித்து காயத்ரி, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் புகார் அளித்தார்.
அவரது உத்தரவின்பேரில் போடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சரஸ்வதி மற்றும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.