தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் வியாழக்கிழமை இரவு வீசிய பலத்த சூறாவளி காற்றில், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்தன.
இப்பகுதியில் அன்று மாலையிலிருந்தே சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழந்ததால் இரவு முழுவதும், சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. அதே போல் பல இடங்களில் சாலைகளின் குறுக்கே மரங்களும், அதன் கிளைகளும் முறிந்து விழுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரம் பகுதியில் பழனிச்சாமி என்ற விவசாயி மூன்று குழி விவசாய நிலத்தில், சுமார் 2,500 ஏத்த வாழை பயிர் செய்திருந்தார். இவை அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சூறைக் காற்றால் முறிந்து விழுந்து சேதமடைந்தன.
இதுகுறித்து விவசாயி பழனிச்சாமி கூறுகையில், வாழைத்தார்கள் ஒவ்வொன்றும் 20 முதல் 30 கிலோ வரை உள்ள குலையாக வெட்டும் பருவத்தில் இருந்தன.
ஏத்த வாழை காய்கள் தற்போது கிலோ ரூ. 26 வரை விலை போகிறது. இந்நிலையில் சூறாவளிக் காற்றால் இவை சேதமடைந்து விட்டன. இதுகுறித்து விவசாயத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளோம். மேலும் அரசு எங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றார்.