ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை மற்றும் அண்ணாநூற்பாலையில் வியாழக்கிழமை அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
தேனியில் வியாழக்கிழமை நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஆண்டிபட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். மேலும் நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அதன் பின் துப்புரவு பணிகள் குறித்து விசாரித்து கூடுதல் பணியாளர்களை நியமிக்க அறிவுறுத்தினார்.
அதே போல் ஆண்டிபட்டி அருகே செயல்படும் அண்ணாநூற்பாலையை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆய்வு செய்தார். அப்போது ஆலையில் புதியதாக நிறுவப்பட்டுள்ள இயந்திரங்களை தொடக்கி வைத்தார். பின்னர் தேனிக்கு புறப்பட்டுச் சென்றார்.