தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உத்தமபாளையம் பெரிய பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்த ரகுமத்துலா மகன் முகமது ஷரிப் (11), அங்குள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் வியாழக்கிழமை காய்ச்சல் காரணமாக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துமவனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் காய்ச்சல் அதிகமானதால் வெள்ளிக்கிழமை உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதே போல கடந்த சில நாள்களுக்கு முன் அதே பகுதியில் உள்ள தாமஸ் காலனியை சேர்ந்த வர்ஷினி (7) என்ற சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேங்கிக் கிடக்கும் குப்பைகள்: உத்தமபாளையம் பேரூராட்சியில் பிடிஆர் காலனி, தென்னகர் காலனி, தாமஸ் காலனி, இபி காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெருக்கள் மற்றும் சாலைகளில் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. இவற்றை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் முன்வருவதில்லை. இதனால் கொசுக்கள் உற்பத்தியாக மர்மக் காய்ச்சல் பரவி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே போர்க்கால அடிப்படையில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளி அருகே தேங்கிக் கிடக்கும் குப்பைகள், கழிவு நீரை உடனே அகற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.