தேனி மாவட்டம் கம்பம்- புதுப்பட்டியில் வெள்ளிக்கிழமை கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி அப்பகுதி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
இப்பேரூராட்சியில் உள்ள 13ஆவது வார்டு பகுதி சன்னாசியப்பன் தெருவில் 2 மாதங்களுக்கு முன் சாக்கடை கால்வாய் சீரமைப்பு பணி தொடங்கியது. பின்னர் இப்பணி நடைபெற வில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகுதி செயலர் நாகராஜன் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாக்கடை கால்வாய் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்கக் கோரி கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆண்டவர், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் விரைவில் பணிகள் தொடங்க இருப்பதாக கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.