போடியில் வழக்குரைஞர் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகையை திருடியவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
போடி பனோரமா நகரில் வசித்து வருபவர் பா.ஜான்மோகன்தாஸ் (50). வழக்குரைஞர். இவர் சென்னையில் படித்து வரும் தனது மகனை பார்க்க சனிக்கிழமை தனது மனைவியுடன் சென்றாராம். மீண்டும் திங்கள்கிழமை காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் மாடிப் பகுதியில் உள்ள கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 19 பவுன் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.
போடி டி.எஸ்.பி. பிரபாகரன் திருட்டு நடைபெற்ற வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.