தேனி அருகே ஸ்ரீரங்காபுரத்தைத் சேர்ந்தவர் ஸ்ரீராதா (28). இவரது கணவர் காமராஜபுரத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் பிரபு என்பவர், சில மாதங்களுக்கு முன் விபத்தில் உயிரிழந்து விட்டாராம். தற்போது, ஸ்ரீராதா தனது 3 வயது மகள் விப்பிரசாவுடன், ஸ்ரீரங்காபுரத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், பிரபுவின் இறப்புக்கு விபத்துக் காப்பீடு தொகை பெறுவதற்காக அவரது சான்றிதழ்களை கொடுக்குமாறு, பிரபுவின் சகோதரர் வசந்தகுமார் (38) என்பவரை ஸ்ரீராதா வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த வசந்தகுமார், அவரது மற்றொரு சகோதரர் ராஜேஷ்கண்ணன் (36) மற்றும் உறவினர் காமராஜபுரத்தைச் சேர்ந்த ரவீந்திரன் ஆகியோர், ஸ்ரீராதாவின் வீட்டுக்கு திங்கள்கிழமை இரவு சென்று அவரைத் தாக்கி காயப்படுத்தி, அவரது குழந்தையை பறித்துச் செல்ல முயன்றனராம். இது குறித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் ஸ்ரீராதா அளித்த புகாரின்பேரில், இவர்கள் 3 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிந்து, வசந்தகுமார், ராஜேஷ்கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.