தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வட்டார குழந்தைகள் அலுவலகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புகள் மத்தியில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தமபாளையம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலம் அங்குள்ள புறவழிச்சாலை அருகே காவல் நிலையத்துக்குப் பின்புறம் அமைந்துள்ளது. இங்கு அங்கன்வாடி மையங்களைச் சேர்ந்த பணியாளர்களுக்கு குழந்தைகள் மேம்பாடுத் திட்டம் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் தினமும் நூற்றுக்கணக்கான அங்கன்வாடி பணியாளர்கள் வந்து செல்கின்றனர்.
இதுதவிர இந்த அலுவலகத்தை சுற்றிலும் குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள இந்திரா நகரிலுள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் இந்த அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் மத்தியில் பல மாதங்களாக தேங்கிக் கிடக்கிறது.
துர்நாற்றம் வீசும் இந்த கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவி வருவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த கழிவு நீரை அப்புறப்படுத்தி, தண்ணீர் தேங்காதவாறு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொதுப்பணித்துறை மூலம் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள இங்குள்ள ஓடையை மீட்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.