வருசநாடு அருகே பள்ளி குழந்தைகளை பள்ளி நேரத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்ய அழைத்து சென்று மனஉளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறி 6 பேர் மீது வருசநாடு போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மஞ்சனூத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்பப் பள்ளியில் சுமார் 30-க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு 2 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில் இதில் ஒரு ஆசிரியர் உத்தமபாளையத்திற்கு கூடுதல் பணிக்கு சென்றுள்ளார். இதனால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அப்பள்ளியில் பயிலும் குழந்தைகள், மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் செய்தனர். இதனிடையே பள்ளிக் குழந்தைகளை அப்பகுதியை சேர்ந்த ரெங்கையா, தவசி, மொக்கப்பன், தொத்தன், கணபதி மற்றும் சின்னாண்டி ஆகிய 6 பேர் பள்ளிக்கு அனுப்பாமல் கல்வி பாதிக்கும் வகையில் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக வருசநாடு காவல்நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் ரஞ்சித்பாபு புகார் செய்துள்ளார். அதன் பேரில் வருசநாடு போலீஸார் அவர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.