இலவச மடிக்கணினி பிரச்னை: பெரியகுளம் அருகே பள்ளித் தலைமை ஆசிரியரை முற்றுகையிட்டு போராட்டம்

பெரியகுளம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு இலவச மடிக்கணினிகளை பாதுகாப்பாக வைக்க வீட்டுக்கு எடுத்துச் சென்ற தலைமையாசிரியரை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பெரியகுளம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு இலவச மடிக்கணினிகளை பாதுகாப்பாக வைக்க வீட்டுக்கு எடுத்துச் சென்ற தலைமையாசிரியரை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
 தாமரைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு பயின்ற 74 மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக இலவச மடிக்கணினிகள் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தன.
கடந்த சில நாள்களாக இப்பகுதியில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றதையடுத்து அப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவானந்தம் காவல் துறையினரிடம் பாதுகாப்பு கோரினாராம். இந்நிலையில் பாதுகாப்பு தரப்படாததையடுத்து பள்ளியில் வைக்கப்பட்டிருந்த இலவச மடிக்கணினிகளை அவர் தனது வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்க செவ்வாய்க்கிழமை இரவு எடுத்து சென்றுள்ளார்.
அப்போது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மடிக்கணினிகளை திருட்டுத்தனமாக எடுத்து செல்வதாகக் கூறி பள்ளி தலைமையாசிரியரை முற்றுகையிட்டனர்.இப்போராட்டம்  புதன்கிழமை அதிகாலை 2 மணி வரை நீடித்தது. இதையடுத்து அங்கு வந்த போலீஸார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதைத் தொடர்ந்து புதன்கிழமை காவல்நிலையத்தில் நடைபெற்ற விசாரணையில் தலைமையாசிரியர் அவற்றை பாதுகாப்பாக வைக்க வீட்டுக்கு எடுத்துச் சென்றது உறுதியானதையடுத்து இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதனிடையே பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போது தலைமையாசிரியர் எடுத்துச் சென்ற 74  மடிக்கணினிகளில் ஒரு மடிக்கணினியை மர்ம நபர்கள்  திருடிச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து பள்ளி தலைமையாசிரியர் சிவானந்தம் அளித்த புகாரின் பேரில் தென்கரை காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com