கம்பம் அருகே பாளையம் பரவு வாய்க்கால் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நன்செய் விவசாயத்துக்காக முல்லைபெரியாற்றிலிருந்து 18 கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சுருளிப்பட்டி அருகே உள்ள பெரியாறு மணற்படுகை பகுதியில் அமைக்கப்பட்ட மதகின் வழியாக உத்தமபாளையம் பாசன பகுதிகளுக்கு, செல்லும் தண்ணீர் 16 மற்றும் 17 ஆவது கால்வாய்களான பி.டி.ஆர். கால்வாய், தந்தை பெரியார் கால்வாய்கள் வழியாக செல்கிறது. இந்த இரண்டு கால்வாய்களும் 22 கிலோ மீட்டர் நீளமுள்ளவை. இதன் மூலம், காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், உத்தமபாளையம் உள்ளிட்ட 5,146 ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் 1985 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாளையம் பரவு வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கும் மதகு, அருகே அதனையொட்டியுள்ள பெரியாற்றின் கரை உடைப்பு எடுத்து சேதமடைந்து வருகிறது. தற்போது முல்லைப் பெரியாற்றில் 1400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், பெரியாற்றின் கரை மேலும் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாவதுடன், விவசாயிகளும் பெரும் நஷ்டம் அடைய வாய்ப்புள்ளது. எனவே பொதுப்பணித்துறையின் நீர்ப்பாசன பிரிவு அதிகாரிகள், கரையை சீரமைத்து பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.