தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாரப் போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் புதன்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி ரூ.1.41 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
இந்த அலுவலகத்தில் வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவது, புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட இடைத்தரகர்கள் மூலம் அதிகளவில் பணம் வசூல் செய்யப்படுவதாக தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் சுந்தர்ராஜ் தலைமையிலான 4 தனிப்படை போலீஸார் புதன்கிழமை பகல் 2 மணிக்கு உத்தமபாளையம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
6 மணி நேரம் சோதனை: பகல் 2 மணிக்கு தொடங்கிய இச்சோதனை இரவு 8 வரை 6 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. இதில் வாகன ஓட்டிகளிடம் வசூல் செய்யப்பட்ட அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக ரூ.1,41, 205 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் கூறும் போது, கணக்கில் வராத இந்த பணம் எப்படி வந்தது என்பது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தனர்.