கடமலைக்குண்டு அருகே ஆழந்தளிர் கிராமத்தைச் சேர்ந்தவர் தெற்கத்தி கருப்பையா மகன் முருகன் (27). இவர், பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரிடம் பழைய இருசக்கர வாகனம் ஒன்றை விற்க முயன்றார். அப்போது முருகன் திருட்டு வாகனத்தை விற்பனை செய்ய வந்திருப்பதாக சந்தேகமடைந்த செல்வராஜ், இதுகுறித்து தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில், முருகன் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த இருசக்கர வாகனம் மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த தெய்வம் என்பவருக்குச் சொந்தமானது என்பதும், கடந்த 6 மாதங்களுக்கு முன் இந்த இருசக்கர வாகனம் திருடு போனதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து முருகன் மீது போலீஸார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.