ஆண்டிபட்டியில் இருசக்கர வாகனத்தை திருடிய நபரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மேலத் தெருவில் வசித்து வருபவர் கருத்தபாண்டி (38). ஜவுளி வியாபாரியான இவர் ஆக 16 ஆம் தேதி ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரைப் பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றார்.
வாகனத்தை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திவிட்டு மருத்துவமனைக்குள் சென்றுள்ளார். உறவினரைப் பார்த்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது வாகனத்தைக் காணவில்லை. அதை யாரோ திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், கடமலைக்குண்டு பகுதியில் சனிக்கிழமை காலை போலீஸாரின் வாகனச் சோதனையில் கருத்த பாண்டியின் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் சிக்கினார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவரது பெயர் பாலமுருகன் (28) என்றும், உசிலம்பட்டி அருகே உள்ள கோணாம்பட்டியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
மேலும் கருத்த பாண்டியின் இருசக்கர வாகனத்தை திருடியதை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து ஆண்டிபட்டி போலீஸார் பாலமுருகனை கைது செய்து சிறையிலடைத்தனர்.