உத்தமபாளையம் அடுத்த கோம்பையில் மாயமனான இரு சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியிலுள்ள குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.
கோம்பை காந்தி நகரைச் சேர்ந்த ராமேஷ் மகன் கார்த்திக் பாலா (6). ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த பூமிநாதன் மகன் தினேஷ் (9). நான்காம் வகுப்பு படித்து வந்தார்.
நண்பர்களான இவர்கள் இருவரும் கடந்த 16ஆம் தேதி முதல் மாயமாகினர். அவர்களது பெற்றோர் பல இடங்களில் தேடியும் இரு சிறுவர்கள் குறித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, கோம்பை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து, தேடி வந்தனர்.
இந்நிலையில், புதுக்குளத்தில் உத்தமபாளையம் தீயணைப்பு மீட்பு குழுவினர் ஞாயிற்றுக்கிழமை பைபர் படகு மூலம் தேடியதில், கார்த்திக் பாலா, தினேஷ் ஆகியோரது சடலம் மீட்கப்பட்டது. குளிக்க சென்றபோது, இருசிறுவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்குப் பின்னர், இருவரது சடலங்களும் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.