தேனியில் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 380 பேரை, போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
தேனியில், கம்பம் சாலை பள்ளிவாசல் தெரு சந்திப்பு பகுதியிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் நிலவழகன் தலைமை வகித்தார். இதில், சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணிக்கொடையாக ரூ.5 லட்சம், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஊர்வலத்தை, சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவர் முருகன் தொடக்கி வைத்தார். இந்த கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து, ஊர்வலத்தில் அரசு ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலர் முகமது அலி ஜின்னா, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் ரங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர், தேனி நேரு சிலை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 380 பேரை, தேனி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.