தேனி அருகே காப்பகத்தில், கைக்குழந்தையுடன் சேர்க்கப்பட்டிருந்த ஆதரவற்ற பெண் புதன்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆண்டிபட்டி அருகே ஆசாரிபட்டியைச் சேர்ந்தவர் தனலட்சுமி(33). இவருக்கு திருமணமாகி, 10 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில், கணவர் மற்றும் குழந்தையை பிரிந்து வாழ்ந்து வந்த தனலட்சுமி, அதே ஊரைச் சேர்ந்த வேறு ஒருவருடன் தொடர்பு வைத்துக் கொண்டதில் கர்ப்பமடைந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் தனலட்சுமிக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
தனலட்சுமி தனது குழந்தையை தொட்டில் குழந்தைகள் திட்டத்தின் கீழ் மருத்துவமனையிலேயே விட்டுச் சென்றுள்ளார். அந்தக் குழந்தை மாவட்ட சமூக நலத் துறை மூலம் காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சில நாள்களுக்கு முன் மாவட்ட சமூக நலத் துறை அதிகாரிகளிடம் தொட்டில் குழந்தைகள் திட்டத்தின் கீழ் விட்டுச் சென்ற தனது குழந்தையை தன்னிடம் திரும்ப ஒப்படைக்குமாறு தனலட்சுமி கேட்டுள்ளார்.
உரிய விசாரணைக்குப் பின் கடந்த பிப்.1-ஆம் தேதி தனலட்சுமியிடம் குழந்தையை ஒப்படைத்த அதிகாரிகள், ஆதரவரற்ற நிலையில் இருந்த அவரை கொடுவிலார்பட்டியில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவன காப்பகத்தில் சேர்த்தனர்.
பின்னர், தன்னுடன் தொடர்பு வைத்திருந்து ஏமாற்றியவர் மீது சமூக நலத் துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி தேனி மகளிர் காவல் நிலையத்தில் தனலட்சுமி புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், காப்பகத்தில் தனது குழந்தையுடன் தங்கியிருந்த தனலட்சுமி திடீரென இறந்தார். அங்கு உள்ள குளியலறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.
இது குறித்து தொண்டு நிறுவன காப்பக செயலர் தீனதயாளன் அளித்த புகாரின் அடிப்படையில் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.