தேனி மாவட்டம், முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து குறைந்து விட்டதால், மணல் கடத்தல் அமோகமாக நடைபெற்று வருவதாக, விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
தற்போது முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து இல்லாததால், நீர்மட்டம் குறைந்து வருகிறது. இந்நிலையில், முல்லைப் பெரியாற்றில் டிராக்டர் மூலம் இரவு பகலாக மணல் கடத்தல் அமோகமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் வருவாய்த் துறையினரிடமும், காவல் துறையினரிடமும் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை கூடலூர் பகுதி முல்லைப் பெரியாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய இரு டிராக்டர்களை பிடித்து, உத்தமபாளையம் வட்டாட்சியரிடம் அப்பகுதி விவசாயிகள் ஒப்படைத்தனர். எனவே, உத்தமபாளையம் வட்டாரத்தில் ஆற்றில் நடைபெறும் மணல் திருட்டை தடுத்து நிறுத்தவேண்டும் என, விவசாய சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.