கூடலூரில் தோட்டத்துக்குள் புகுந்து வாழைத்தார்கள் திருடிய 4 பேர்களை, போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
தேனி மாவட்டம், கூடலூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியான குமுளி சாலை தம்மணம்பட்டியில் தணிகாசலம் என்பவரது வாழைத் தோட்டம் உள்ளது. இத் தோட்டத்தில் வாழைத்தார்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை தோட்டத்தில் யாரும் இல்லாத நேரத்தில், சிறிய சரக்கு ஏற்றும் வாகனத்தில் தோட்டத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள், வாழைத்தார்களை வெட்டி வாகனத்தில் ஏற்றியுள்ளனர். அப்போது அங்கு வந்த தோட்டக் காவலர், உரிமையாளருக்கு தகவல் தெரிவித்ததுடன், தெற்கு காவல் நிலையத்திலும் புகார் செய்துள்ளார்.
அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், வாழைத்தார்களை திருடிக் கொண்டிருந்த கூடலூர் நோட்டக்கார புளிய மரத் தெருவைச் சேர்ந்த குமரன் (24), அஜீத் (22), வல்லரசு (20) மற்றும் ஓட்டுநர் பிரசாத் (20) ஆகிய 4 பேர்களையும் கைது செய்து, உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.