உத்தபாளையம் அருகே ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சாவை போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
ஆணைமலையன்பட்டியில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சாவை சிறிய பொட்டலங்களாக மாற்றி விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, வெள்ளிக்கிழமை உத்தமபாளையம் காவல் சார்பு ஆய்வாளர் இத்ரிஸ்கான் , கோகிலாபுரம் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, மோட்டார் சைக்கிளில் சாக்குப் பையில் கஞ்சாவை கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கம்பம் அருகேயுள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த சின்னமணித் தேவர் மகன் பாஸ்கரனை (51) போலீஸார் கைது செய்தனர். ஆனால் இவருடன் வந்த மற்றொருவர் அருகேயுள்ள தாமரைக்குளத்தில் குதித்து தண்ணீரில் நீந்தி தப்பி ஓடிவிட்டார். இவர் ஆணைமலையன்பட்டியைச் சேர்ந்த சின்னத்துரை மகன் தமிழ்செல்வன் (42) எனத் தெரியவந்தது.
போலீஸார் வழக்குப் பதிந்து தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.