ஆண்டிபட்டி தாலுகாவில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்தவர்கள் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வி. பாஸ்கரன் உத்தரவின்பேரில், அனைத்து காவல் நிலைய போலீஸாரும் ஞாயிற்றுக்கிழமை கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், கடமலைக்குண்டு அருகே மூலக்கடை மற்றும் மந்திச்சுனை பகுதியில் பெட்டிக் கடைகளில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக சதீஷ்குமார் (35), சிங்கம் (45), சென்றாயன் (38), முத்துக்காளை (60) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், புகையிலை பொருள்களைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், ஆண்டிபட்டி போலீஸார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோதனை நடத்தியதில், பிச்சம்பட்டியைச் சேர்ந்த பாண்டியராஜ் (36), குமாரபுரத்தைச் சேர்ந்த ஜெயபெருமாள் (58) ஆகியோரது கடைகளிலிருந்து தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.