தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பரவலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதில் 15 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
மாவட்டத்தில் அதிக அளவில் மஞ்சளாறு அணை நீர்பிடிப்பில் 105 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. ஆண்டிபட்டியில் 10.1 மி.மீ., வைகை அணை நீர்பிடிப்பில் 42, வீரபாண்டியில் 50, அரண்மனைப்புதூரில் 74.40 மி.மீ., போடியில் 13.4, பெரியகுளத்தில் 66, சோத்துப்பாறையில் 14, உத்தமபாளையத்தில் 17.4, கூடலூரில் 13.4 மி.மீ., மழை பெய்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பில் 20.4 மி.மீ., தேக்கடியில் 24.6 மி.மீ., மழை பெய்துள்ளது.
கன மழையில் ஆண்டிபட்டி அருகே எஸ்.எஸ்.புரம், தேனி அருகே கோடங்கிபட்டி, பெரியகுளம் அருகே சரத்துப்பட்டி, மஞ்சளாறு அணை ஆகிய இடங்களில் தலா ஒரு வீடும், கீழவடகரை போடவர் குளத்துக் கரை, கீழ பெருமாள்புரம், வீரபாண்டி, போடி அருகே மணியம்பட்டி ஆகிய இடங்களில் தலா 2 வீடுகள், உப்புக்கோட்டையில் 3 வீடுகள் உள்பட மொத்தம் 15 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன.