காரைக்காலில் உள்ள நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்து தொடர்பாக ஊழியர்களிடையே கலந்தாய்வு செய்யும் கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோவா மாநில முன்னாள் தலைமைச் செயலரும், புதுச்சேரி மாநில அரசு நியமித்த 7-ஆவது ஊதியக் குழு அமலாக்க ஆணைய தலைவருமான விஜயன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ப. பார்த்திபன், ஆணைய உறுப்பினர் ஜோஸ்பேட்டன் உள்ளிட்டோர் கருத்துகளை கேட்டனர். உள்ளாட்சித் துறை ஊழியர்கள் தெரிவித்த கருத்துகள்: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் முதல் புதிய ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உள்ளாட்சித் துறையைச் சேர்ந்த நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு மட்டும் இதுவரை ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படாமல் உள்ளது.
எனவே ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கும் முழுமையாக அமல்படுத்த வேண்டும்.
நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களை அரசு ஊழியர்கள்போல் கருத வேண்டும். வரி வருவாய் மூலம் ஊதியம் எடுத்துக்கொள்ளும் முறையை தவிர்த்து, பஞ்சாயத்து ஊழியர்களுக்கென தனி நிதி அமைப்பு உருவாக்க வேண்டும். இதன்மூலம் மாதம் தவறாது, மற்ற அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் காலத்திலேயே ஊதியம் தர வேண்டும் உள்ளிட்ட கருத்துகளை தெரிவித்தனர்.
இதில் உள்ளாட்சித் துறை துணை இயக்குநர் மகாலிங்கம், நகராட்சி ஆணையர் கே. ரேவதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.