அட்சய திருதியை நாளை முன்னிட்டு காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கருட வாகனத்தில் சனிக்கிழமை வீதியுலா எழுந்தருளினார்.
காரைக்கால் நித்ய கல்யாணப்பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை சனிக்கிழமை காலை நடைபெற்றது. பின்னர் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளினார். இதேபோல் திருப்பட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் நடந்த சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியில் உற்சவரான வெங்கடேச பெருமாள் வெண்பட்டு உடுத்தி கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
அட்சய திருதியை நாளில் தங்க நகைகள் வாங்குவது சிறப்பு என்று கூறப்படுவதால், காரைக்காலில் உள்ள நகைக்கடைகளில் வாழை மரம், தோரணம் கட்டி வாடிக்கையாளர்களை வரவேற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கடும் வெயிலையும் தாண்டி நகைக்கடைகள் பெரும்பாலானவற்றில் மக்கள் கூட்டம் இருந்தது.