கோட்டுச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித நாடகப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் அருகேயுள்ள கோட்டுச்சேரி வ.உ.சிதம்பரனார் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணிதப் பாடத்தின் கருத்துகளான பரப்பளவு, நிறுத்தல் அளவைகள், நேர்மாறல், எதிர்மாறல், முக்கோணவியல், நேரஅளவுகள் போன்ற திறனை வளர்க்கும் வகையில் நடுநிலை மற்றும் உயர்நிலை மாணவர்களுக்கிடையே கணித நாடகப் போட்டி நடைபெற்றது. பள்ளி துணை முதல்வர் மு. ஜெயா போட்டியைத் தொடங்கி வைத்தார்.
சிறப்பு அழைப்பாளராக கோட்டுச்சேரி அன்னை அபிராமி பள்ளித் தாளாளர் யு. மாரியப்பன் பங்கேற்று பேசினார். பள்ளித் தலைமையாசிரியர் (பொ) மதிவாணன், பள்ளி கணிதப் பட்டதாரி ஆசிரியர்கள் எஸ். சுரேஷ், மு. வசந்தி, பு.சிவசுந்தரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கணித கருத்துகள்: போட்டியில் நாடகங்களின் கணிதக் கருத்துகள் நிறைந்த காட்சிகளாக அமைக்கப்பட்டு, இக்கணிதம் நம் வாழ்க்கையில் எவ்வாறு இன்றியமையாதது என்பதை விளக்கும் வகையில் நடத்தப்பட்டது. மாணவர்கள் நடிப்புத் திறனுடன் கணிதம் குறித்த கருத்துகளை விளக்கினர். மாணவர்கள் 5 குழுக்களாக போட்டியில் பங்கேற்று தங்களது திறனை வெளிப்படுத்தினர்.